செய்திகள்
அரியாங்குப்பத்தில் பிஸ்கெட் என நினைத்து எலி கேக்கை தின்ற பெண் பலி
அரியாங்குப்பத்தில் பிஸ்கெட் என நினைத்து எலி கேக்கை தின்ற பெண் பரிதாபமாக இறந்து போனார்.
அரியாங்குப்பம்:
புதுவை அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் முருகன் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி விமலா (வயது 44). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் எலி தொல்லை இருந்ததால் எலிகளை கொல்ல முருகன் எலி கேக் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார்.
சம்பவத்தன்று இதனை அறியாத விமலா பிஸ்கெட் என நினைத்து எலி கேக்கை தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு விமலா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.