வலங்கைமான் அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 7 பேர் கைது
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் ஆவூர் சாலுவம்பேட்டை தெருவை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் வலங்கைமான் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் கல்லூரி சென்றுவிட்டு ஆவூர் மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது ஆவூர் நெடுவாசலை சேர்ந்த சீனிவாசன் மகன் கலைமணி, காமராஜ், சத்தியராஜ். மற்றும் சிலர் அங்குள்ள பள்ளி வாசலில் நின்று கொண்டு மாணவிகளை கிண்டல் செய்துள்ளனர். இதனை அவன் கண்டித்ததால் அவர்கள் அவனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கலைமணி, காமராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதே போல் மற்றொரு தரப்பினரான ஆவூர் நெடுவாசல் கீழத்தெரு காலனியைச் சேர்ந்த மதியழகன் மனைவி கஸ்தூரி போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் பிரபாகரன் ஆவூர் மேல்நிலைப்பள்ளி அருகே டிராக்டரை நிறுத்திவிட்டு டீ குடித்தபோது அப்பகுதியை சேர்ந்த 14 பேர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதோடு, இதை தடுக்கச் சென்ற தன்னையும் கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விஜயகுமார் மகன் கவுதம், கோவிந்தராஜ் மகன் ராஜேஷ், சண்முகம் மகன் அஜித், பழனிதுரை மகன் மணிகண்டன், பக்கிரிசாமி மகன் குருநாதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் செந்தில் குமார், தரண், அசோக்குமார், பாலாஜி, முருகானந்தம், சிவகுரு, பிரேம்குமார், விக்னேஷ், பாலாஜி, முருகானந்தம் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுரு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோஷ்டி மோதல் சம்பவத்தால் ஆவூர் கடை வீதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.