செய்திகள்

திருவொற்றியூரில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Published On 2018-07-14 09:08 GMT   |   Update On 2018-07-14 09:20 GMT
திருவொற்றியூரில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர்:

திருவொற்றியூர் சத்திய மூர்த்திநகர் மெயின் வீதியில் விநாயகர் கோவில் உள்ளது. நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றார்.

இன்று காலையில் வந்து பார்த்தபோது கோவிலின் கதவுகள் திறந்து கிடந்தன. உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. அதில் இருந்த பணம் கொள்ளை போய் இருந்தது.

கோவில் உண்டியலில் பக்தர்கள் போட்ட காணிக்கை பணம் ரூ.20 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி கிராம தலைவர் ராஜு சாத்தாங்காடு போலீ சில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

கோவிலில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு இருந்தது. கொள்ளையர்கள் உண்டியலை உடைப்பதற்கு முன்னதாக கேமிராவை வேறுபக்கம் திருப்பி வைத்து விட்டனர். மேலும் அதன் கேபிள் வயர்களையும் அறுத்து செயல் இழக்க செய்துள்ளனர்.

விநாயகர் கிரீடம், பீரோவில் வைக்கப்பட்டிருந்தது. ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள கிரீடத்தை எடுப்பதற்காக பீரோவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

ஆள் நடமாட்டம், வாகன போக்குவரத்து நிறைந்த அந்த பகுதியில் உண்டியல் கொள்ளை நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News