செய்திகள்

குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் லாரி மீது பஸ் மோதி விபத்து - 4 பெண்கள் படுகாயம்

Published On 2018-07-10 17:49 GMT   |   Update On 2018-07-10 17:49 GMT
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
குன்னூர்:

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் இயக்குவதற்காக 14 புதிய பஸ்கள் ஊட்டி கோட்டத்திற்கு வழங்கப்பட்டது. இதன் இயக்கத்தை கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். குன்னூர் கிளைக்கு வழங்கப்பட்ட புதிய பஸ்களில் ஒன்று நேற்று குன்னூரில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் 52 பயணிகள் பயணம் செய்தனர்.

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் கே.என்.ஆர். நகர் இடையே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் தாறுமாறாக சென்று எதிரே கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும், பஸ்சில் பயணம் செய்த கோவையை சேர்ந்த பத்மாவதி (வயது 45), குன்னூரை சேர்ந்த உஷா (50), கரோலின் (50), சுந்தரி (60) ஆகிய 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் சக பயணிகள் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News