செய்திகள்

ஓமலூர் அருகே வாலிபர் கொலை

Published On 2018-07-07 10:37 GMT   |   Update On 2018-07-07 10:37 GMT
ஓமலூர் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஊ. மாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது சிந்தாமணி நகர். இங்குள்ள காட்டுப் பகுதியில் தலையில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார். அதனை சுற்றிலும் ரத்தம் வழிந்தோடி இருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் தொளசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜார்ஜி ஜோர்ஜ், ஓமலூர் டி.எஸ்.பி.பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த வாலிபரின் தலையில் கல்லை தூக்கி போட்டு மர்ம நபர்கள் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. ஆனால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

பின்னர் அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை அந்த பகுதியில் வைத்து கொலை செய்தார்களா? அல்லது வேறு பகுதியில் வைத்து கொலை செய்து அங்கு வீசி சென்றனரா, எதற்காக கொலை செய்யப்பட்டார் ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட வாலிபர் நீல நிற டீ சர்ட் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த டீ சர்ட்டின் காலரில் அயோத்தியாப்பட்டனத்தை சேர்ந்த ஒரு டெய்லரின் முகவரி இருந்தது. இதனால் கொலை செய்யப்பட்டவர் அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் நடத்திய விசாரணையில் கொலையுண்ட வாலிபர் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியை சேர்ந்த ரத்தினம் என்பவரது மகன் சுரேஷ் (வயது 35) என்பது தெரியவந்தது

கடந்த 11 வருடங்களுக்கு முன்பு சுரேஷ் வேறு ஜாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இதனால் இருவரது பெற்றோர்களும் அவர்களை ஒதுக்கி வைத்தனர்.

இதையடுத்து சுரேஷ் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2 மாதத்திற்கு முன்பு சுரேஷ் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்தார் . பின்னர் குடும்பத்துடன் தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் வசித்து வந்தார். கணவன்- மனைவி இருவரும் பொம்மிடியில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் தான் சுரேஷ் ஓமலூர் அருகே இன்று பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து போலீசார் அவரது மனைவியிடம் விசாரித்தனர். அப்போது அவர் தனது கணவர் இன்று அதிகாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறினார். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசுவதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷ் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது மர்மமாக உள்ளது.

இச்சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News