செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு வரமாக அமையும் - விருது வழங்கும் விழாவில் கவர்னர் பேச்சு

Published On 2018-07-01 23:31 GMT   |   Update On 2018-07-01 23:31 GMT
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு வரமாக அமையும் என்று ராஜ் பவனில் நடந்த விருது வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். #BanwarilalPurohit
சென்னை:

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில் விருது வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் தர்பார் அரங்கில் நேற்று நடந்தது.

விழாவுக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று டாக்டர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இதையடுத்து விருது பெற்றவர்களுடன் அவர் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக விழாவில் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

நோயை கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் எப்போதும் முக்கிய மையமாக திகழ்கிறது. பொது சுகாதார சட்டத்தை இயற்றிய முதல் மாநிலமும் தமிழகம் தான். சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையும், அரசு கண் மருத்துவமனையும் ஆசியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்தது ஆகும்.

தமிழகத்தில் குழந்தை மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து சாதனை படைத்திருக்கிறது. குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுப்பதில் நாட்டிலேயே முதலாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உலகின் கிழக்கு பிராந்தியத்தில் மருத்துவ சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது.

120 கோடிக்கும் அதிக மக்கள் தொகையை கொண்ட நமது நாட்டில், தேசிய சுகாதார தகவலின்படி 10 லட்சம் அலோபதி டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் கூட இல்லை. இதில் 10 சதவீதம் பேர் மட்டுமே பொது சுகாதாரத்துறையில் பணியாற்றுகின்றனர்.

அதனால் பயிற்சி பெற்ற டாக்டர்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதேபோல பொது சுகாதாரத்துறையில் பணியாற்றுவதற்கும், கிராமப்புற பகுதிகளில் சேவை செய்வதற்கும் டாக்டர்களை ஊக்குவிக்க வேண்டும்.

உடல் உறுப்பு தான மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. கடுமையான வறுமையில் சிக்கி தவிக்கும் ஏழை மக்களின் உயிர்களை காப்பதில் அரசு காப்பீடு திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. மதுரையில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

இதன்மூலம் தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள 15 மாவட்டங்கள் பயன்பெறும். தமிழகத்தின் சுமார் 4 கோடி மக்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வரமாக அமையும். சமூகத்துக்காக தங்களுடைய அர்ப்பணிப்பு செய்தவர்களை நினைவுகூர்ந்து கவுரவப்படுத்துவது பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் டாக்டர்கள் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன், கே.செந்தில், டி.மருதுபாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 
Tags:    

Similar News