செய்திகள்

மிகப்பெரிய போராட்டத்தை மக்கள் நடத்தினால் அரசு தாங்காது- தங்கதமிழ்செல்வன்

Published On 2018-07-01 03:18 GMT   |   Update On 2018-07-01 03:18 GMT
சேலம்-சென்னை 8 வழிச்சாலை தேவையில்லை, மிகப்பெரிய போராட்டத்தை மக்கள் நடத்தினால் அரசு தாங்காது என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.
தேனி:

தேனி பழனிசெட்டிபட்டியில் அ.ம.மு.க.வின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட தங்கதமிழ்செல்வன் கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் கூறியதாவது:-

என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு, 6 மாத அவகாசம் கொடுத்தது. மத்திய அரசு அதை செய்யவில்லையே, அது அவமதிப்பு இல்லையா? தமிழக அரசு கூட்டுறவு தேர்தலை நடத்த வேண்டுமென மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை சொல்லி இருக்கின்றன. ஆனால் தேர்தல் நடத்தவில்லை, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டியது தானே. ஏன் கொடுக்கவில்லை?

உள்ளாட்சி தேர்தலும் நடத்தவில்லை. எல்லாவற்றிலும் கோர்ட்டை அவமதிக்கிறார்கள். நான் எனது தொகுதியில் எம்.எல்.ஏ. இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற ஆதங்கத்தில் கருத்து தெரிவித்தேன். அதற்கு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடுத்து உள்ளார்கள். அந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். வழக்கு போட்டு என்னை மிரட்டிப்பார்க்கிறார்கள். என்னை கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

சேலம் - சென்னை 8 வழிச்சாலை இப்போதைக்கு தேவையில்லை என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுத வேண்டும். மக்களின் கருத்தை கேட்டு நாங்கள் சொன்னபிறகு சாலை போடலாம் என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமியை நான் பாராட்டுவேன். அதை விட்டுவிட்டு பிடிவாதமாக செய்தால் மிகப்பெரிய போராட்டத்தை மக்கள் நடத்துவார்கள். இந்த அரசு தாங்காது. மக்களை கண்ணீர் வடிக்க வைத்து, விவசாயிகளை வேதனைப்படுத்தும் இந்த திட்டமே தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவை சேர்ந்த சரிதா நாயர் அ.ம.மு.க.வில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘எனக்கு தெரிந்து அப்படி ஒரு தகவல் இல்லை. ஊடகங்களில், பத்திரிகைகளில் தான் இதுகுறித்த படத்தை பார்த்தேன். அது தவறான செய்தி’ என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.
Tags:    

Similar News