செய்திகள்

பெரம்பூரில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கினர்

Published On 2018-06-24 13:11 GMT   |   Update On 2018-06-24 13:11 GMT
பெரம்பூர்- மாதவரம் நெடுஞ்சாலையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கொள்ளையர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மடக்கி பிடித்தார்.

பெரம்பூர்:

செம்பியத்தில் போலீஸ் காரராக பணிபுரிபவர் சிவலிங்கம். இவர் ‘பாஸ் போர்ட்’ விசாரணைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பூர்- மாதவரம் நெடுஞ்சாலையில் 2 வாலிபர்கள் கையில் கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டபடி சென்றனர்.

அவர்களை போலீஸ்காரர் சிவலிங்கம் மடக்கினார். ஆனால் அவர்கள் நிற்காமல் அவரது கை விரலில் கத்தியால் வெட்டி விட்டு தப்பி விட்டனர். இதனால் ரத்த காயம் அடைந்த அவர் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெகநாதன், சப்-இன்ஸ் பெக்டர் பாஸ்கர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார்.

உடனே அவர்கள் அந்த வழியாக வந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். விசாரணை நடத்திய போது அவர்களது பெயர் அஜித் (20), பரத் (19) என தெரியவந்தது. வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்த இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆவர்.

இவர்கள் மீது எம்.கே.பி. நகர், வியாசர்பாடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி கொள்ளை வழக்குகள் உள்ளன. எனவே இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் கத்தியுடன் சுற்றி திரிந்தது ஏன் என தெரியவில்லை. வழிப்பறி கொள்ளையில் ஈடுபட இருவரும் வந்தனரா? அல்லது கொலை செய்யும் நோக்கத்துடன் சுற்றி திரிந்தனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News