தாராபுரத்தில் சாக்கடைக்குள் தவறி விழுந்து முதியவர் பலி
தாராபுரம்:
தாராபுரம் காந்திபுரத்தை சேர்ந்தவர் சன்னாசி (80). செருப்பு தைக்கும் தொழிலாளி. இவர் இன்று காலை 5.30 மணியளவில் அப் பகுதியில் நடந்து சென்றார்.
தாராபுரம் - அலங்கியம் சாலையில் 6 அடி ஆழத்தில் சேறும், சகதியுமாக சாக்கடை தேங்கி உள்ளது. இன்று காலை அந்த வழியாக சென்ற சன்னாசி சாக்கடைக்குள் தவறி விழுந்தார்.
இதில் சாக்கடை நீரில் மூழ்கி பலியானார். அவரை நீண்ட நேரமாக காணாததை கண்டு அவரது உறவினர்கள் தேடி வந்து பார்த்த போது சன்னாசி சாக்கடைக்குள் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சன்னாசி உடலை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாராபுரம் - அலங்கியம் ரோட்டில் தேங்கி உள்ள சாக்கடை நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அடிக்கடி வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் சன்னாசி பலியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.