தலையூத்து அருவியில் நண்பர்களுடன் குளித்த தொழிலாளி பலி
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் துரைச்சாமி. சுமை தூக்கும் தொழிலாளி. அவரது மகன் வசந்தகுமார் (வயது18). 12-ம் வகுப்பு முடித்துவிட்டு மைக்செட் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று மாலை விருப்பாட்சி தலையூத்து அருவியில் வசந்தகுமார், இதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் செல்வராஜ் (19), மாரிஸ்வரன் (19) ஆகியோர் விருப்பாட்சி கீழ் தலையூத்து அருவியில் குளிக்க சென்றனர். எதிர்பாராத விதமாக வசந்தகுமார் அருவியில் மூழ்கிவிட்டார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா ஒட்டன்சத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புபடை நிலை அலுவலர் (பொ) சிவன்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் சுமார் 2 மணி நேரம் போராடி வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.