சேலத்தில் ஏரியில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
சேலம்:
சேலம் நெய்க்காரப்பட்டி கோணங்காடு பகுதியில் கொட்டநத்தம் ஏரி உள்ளது . இந்த ஏரியை நம்பி ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர்.
300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. சாயக்கழிவு நீர் மற்றும் சாக்கடை நீரும் சமீப காலமாக இந்த ஏரியில் கலந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏரியில் மீன்கள் செத்து மிதந்தது. விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் சாயக்கழிவு மற்றும் சாக்கடை நீரை ஏரியில் விடக்கூடாது , ஏரியை தூர்வார வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று குளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏரியை தூர் வார கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏரியில் சாயக்கழிவு ரசாயனம் மற்றும் சாக்கடை நீர் அதிகமாக கலப்பதால் ஏரி முற்றிலும் மாசடைந்துள்ளது. இதனால் நிலத்தடி நீரிலும் மாசு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு உடனே நடவடிக்கை எடுத்து இந்த பகுதி மக்களை காப்பாற்ற வேண்டும் என்றனர்.