திண்டுக்கல் மாநகராட்சி குப்பை கொட்ட எதிர்ப்பு - கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே கேதையறும்பு ஊராட்சி பொது மக்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் தங்களது பகுதியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி குப்பையையும், திண்டுக்கல் மாநகராட்சியில் இருந்து வெளியேறும் குப்பைகளையும் கொட்டுவதாக புகார் தெரிவித்தனர்.
இந்த குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை செய்யாமல் உள்ளது. இது குறித்து கிராம சபை கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியும் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிணறுகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரை யூனியன் குளத்தூர் கிராமம் விராலிபட்டி ஏ.டி. காலனியை சேர்ந்த மக்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கூறுகையில் எங்களது பகுதியில் கடந்த 4 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை. சுமார் 75 குடும்பங்களும் நீண்ட தூரம் சென்றும், விலைக்கு வாங்கியும் தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம்.
வடமதுரை வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு இதுகுறித்து புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவேண்டும் என்றனர்.
திண்டுக்கல் நாகல் நகர் 34-வது வார்டு குருநகரை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் கால்வாய் வசதி, சாலை வசதி, உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்றும், சுடுகாடு காம்பவுண்டு சுவரை இடித்து தருமாறும் மனு அளித்தனர். #tamilnews