செய்திகள்

காசிமேடு மாநகராட்சி ஊழியர் கொலையில் 4 பேர் கைது

Published On 2018-06-18 06:38 GMT   |   Update On 2018-06-18 06:38 GMT
காசிமேடு மாநகராட்சி ஊழியர் கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

காசிமேடு, அமராஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது40). இவர் சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

நேற்று காலை சிவக்குமார், காசிமேடு காசிபுரம் ‘பி’ பிளாக்கில் உள்ள டீக் கடையில் இருந்தபோது மர்ம நபர்களால் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தினர். இது தொடர்பாக எண்ணூர் தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்த திவாகர், வேணு, ராகவன், தேசப்பன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், புழல் ஜெயிலில் இருக்கும் கஞ்சா வியாபாரி ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் கூலிப் படையை ஏவி சிவக்குமார் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

காசிமேடு பவர்குப்பத்தில் கடந்த ஆண்டு புதிதாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் சிலருககு வீடுகள் ஒதுக்க சிவக்குமார் உதவி உள்ளார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவரும் தனக்கு வேண்டியவர்களுக்கு வீடு கிடைக்க முயற்சி செய்து இருக்கிறார். இதனை சிவக்குமார் தடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் கஞ்சா வியாபாரம் குறித்தும் அடிக்கடி போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். இந்த மோதலில் கூலிப்படையை ஏவி சிவக்குமார் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது அந்த கஞ்சா வியாபாரி ஒரு வழக்கில் கைதாகி புழல் ஜெயிலில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். மேலும் இந்த கொலை தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள். #Tamilnews

Tags:    

Similar News