மானாமதுரை அருகே 2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேதியரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மூக்கன் மகன் முத்துக்குமாருக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.
இதேபோல் இளையான்குடி வட்டாரம் கீழாயி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், இருளாண்டி மகன் திருநாவுக்கரசுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்த குழந்தை திருமணங்கள் குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரசிதர குமார், பணியாளர்கள் சத்தியமூர்த்தி, நாகராஜ், சமூக நல அலுவலர் காளீஸ் வரி ஆகியோர் 2 சிறுமிகளின் வீட்டுக்கும் சென்றனர்.
அவர்களது பெற்றோரிடம் திருமண வயது, சட்ட எச்சரிக்கை போன்றவை குறித்து விளக்கினர். இதனை ஏற்றுக்கொண்ட சிறுமிகளின் பெற்றோர் குழந்தை திருமணங்களை நிறுத்த சம்மதித்தனர். அதன் பேரில் அந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.