அவலூர்பேட்டையில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் - 4 பேர் கைது
மேல்மலையனூர்:
அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் கமலமுருகன். இவர் அவலூர்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 6 பேர் கொண்ட கும்பலை சாலையோரம் ஒதுங்கி நிற்குமாறு அவர் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கமலமுருகனை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கமலமுருகன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். 4 பேர் பிடித்தனர்.
பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மங்கலம் கிராமத்தை சேர்ந்த கதிரவன்(வயது 25), வசந்த்(24), ராஜ்குமார்(24), புஷ்பராஜ்(24) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.