செய்திகள்

சங்கராபுரம் அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

Published On 2018-06-15 10:16 GMT   |   Update On 2018-06-15 10:16 GMT
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரிஷிவந்தியம்:

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 55). மாற்றுத்திறனாளி. கூலி வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி தேவகி. இவர்களுக்கு 4 மகன்களும், 1 மகளும் உள்ளனர். அய்யக்காண்ணு- தேவகி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அய்யாக்கண்ணு மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அவர் எப்போதும் தனது சட்டைப்பையில் பணம் அதிகம் வைத்திருப்பார்.

அவர் சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்து தூங்கினார். காலையில் அவர் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, அய்யாக்கண்ணு வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து, மார்பில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

இதுகுறித்து சங்கராபுரம் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டில் பிணமாக கிடந்த அய்யாக்கண்ணு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அய்யாக்கண்ணுவை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். நிலத்தகராறு காரணமாக யாராவது கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News