செய்திகள்

நில ஆர்ஜித சட்ட விதிகளை திருத்தம் செய்து 47 எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டுமனைகள்- கவர்னரிடம் புகார்

Published On 2018-06-14 10:40 GMT   |   Update On 2018-06-14 10:40 GMT
புதுச்சேரியில் மத்திய அரசின் அனுமதி பெறாமல் நில ஆர்ஜித சட்ட விதிகளை திருத்தம் செய்து 47 எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டிருப்பதாக கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது-

புதுவை அரசின் நகர மற்றும் கிராம அமைப்பு துறையினரால் பூமியான்பேட்டை, ஜவகர் நகரில் 47 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வீட்டுமனை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனைகளை பெற்றுக்கொள்ள வசதியாக நில ஆர்ஜித சட்ட விதிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் துணையோடு 3 முறை திருத்தம் செய்துள்ளனர். ஆனால் இதற்கு மத்திய அரசிடம் முறையான அனுமதி பெறவில்லை.

குடியிருப்புகளுக்கு மட்டும் என வழங்கப்பட்ட அந்த மனைகளை பெரும்பாலோனோர் அரசின் அனுமதி பெறாமலும், அரசிற்கு செலுத்த வேண்டிய ஈவுத்தொகையை செலுத்தாமலும் விற்பனை செய்துள்ளனர். இதனால் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பலர் குடியிருப்புகளுக்கு மட்டும் என வழங்கப்பட்ட அந்த வீட்டு மனைகளை விதிகளை முற்றிலும் மீறி அந்த வரைபடத்தின்படியும் அல்லாமல் 3 மீட்டர் அகலமுள்ள அரசு இடத்தினை ஆக்கிரமித்து வணிக வளாகங்கள் கட்டி உள்ளனர்.

அந்த மனையை பெற்ற 5 வருடத்திற்குள் குடியிருப்புகள் கட்ட வேண்டும் இல்லை என்றால் காலிமனை அரசால் கையகப்படுத்தப்படும் என விதி இருந்தும் இவர்கள் இன்றளவும் காலிமனையாகவே பலர் வைத்துள்ளனர். ஆனால் இது சம்பந்தமாக நகர அமைப்புத்துறை இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இந்த மனைகளை நேரில் ஆய்வு செய்து விதிகள் மீறியுள்ள அனைத்து மனைகளின் உரிமையாளர்கள் மீது தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ரகுபதி அந்த மனுவில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News