செய்திகள்

இந்தியா-சீனா இடையே சுமுக உறவு மேம்பட்டு வருகிறது - நிர்மலா சீதாராமன்

Published On 2018-06-08 20:45 GMT   |   Update On 2018-06-08 20:45 GMT
இந்தியா-சீனா இடையேயான சுமுக உறவு மேம்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். #DefenceMinister #NirmalaSitharaman
சென்னை:

சீன நாட்டு படிப்புகளுக்கான சென்னை மையம், தேசிய கடல்வழி அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் சீனாவின் செயல்பாடு, மாற்றம் மற்றும் வணிகம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது. கருத்தரங்கை மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு முன்பு வரை சீனா பல்வேறு துறைகளில் வெகுவான வளர்ச்சியை எட்டி இருந்தது. இப்போது ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்களை சீனா புகுத்தி உள்ளது. விமானப்படை, கடலோர காவல்படை, ராக்கெட் ஏவுதளம் போன்ற பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவந்துள்ளது. இவற்றையெல்லாம் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பாகிஸ்தான்-சீனா இடையேயான உறவை இந்தியா-சீனாவுடனான உறவுடன் ஒப்பிடக்கூடாது. பிரதமர் மோடி, சீன அதிபரை சந்தித்து பேசி உள்ளார். இதன்மூலம் இந்தியா-சீனா இடையேயான சுமுக உறவு மேம்பட்டு வருகிறது. இதன்மூலம் எதிர்காலத்தில் இன்னும் மேம்பாடு ஏற்படும்.

சீனாவில் ஏற்பட்டுள்ள தொழில் மேம்பாடு காரணமாக அங்கு மனிதவளம் குறைந்து எந்திரமயம் அதிகமாகி வருகிறது. இந்தியா விவசாயம், தொழில்நுட்பம், மென்பொருள் போன்ற துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது. உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சிக்காக இந்தியாவில் ஆண்டுக்கு பல லட்சம் கோடி செலவிடப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவின் தொழில் வளர்ச்சி குறித்து சிறந்த முறையில் கட்டுரை எழுதிய கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நிர்மலா சீதாராமன் பரிசு வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் கணபதி, சீன நாட்டு படிப்புகளுக்கான சென்னை மையத்தின் நிர்வாகிகள் ராகவன், சூரியநாராயணன், ஆர்.எஸ்.வாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். #DefenceMinister #NirmalaSitharaman
Tags:    

Similar News