செய்திகள்

மின்வாரிய ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2018-05-12 13:14 GMT   |   Update On 2018-05-12 13:14 GMT
செஞ்சி அருகே மின்வாரிய ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தென்பாலை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 39). இவர் தேவனூரில் உள்ள மின்சார வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வயல்வெளியில் மாட்டு கொட்டகை அமைத்துள்ளார். நேற்று இரவு மாடு கன்று ஈன்றது. இதனால் முருகன் தனது வீட்டை பூட்டி விட்டு வயல்வெளிக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பீரோவை உடைத்து அதில் இருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இன்று காலை வயல்வெளியில் இருந்து வீட்டுக்கு முருகன் திரும்பி வந்தார். வீட்டின் கதவை உடைக்கப்பட்டது இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. மர்ம மனிதர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

கொள்ளை சம்பவம் பற்றி சத்தியமங்கலம் போலீசுக்கு முருகன் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News