செய்திகள்

திருவையாறில் கல்லூரி விடுதியில் தூக்குபோட்டு மாணவி தற்கொலை

Published On 2018-05-12 10:15 GMT   |   Update On 2018-05-12 10:15 GMT
கல்லூரி விடுதியில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருவையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவையாறு:

திருவையாறில் சத்திரம் நிர்வாகத்தின் கீழ் அரசர் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் மாணவிகளுக்கு மட்டும் விடுதி உள்ளது. இந்தவிடுதியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது கல்லூரி தேர்வு நடைபெற்று வருவதால் 48 மாணவிகள் மட்டுமே தங்கியுள்ளனர்.

இதில் அரியலூர் மாவட்டம் காவனூரை சேர்ந்த கண்ணன் மகள் நித்யா(21). தங்கி எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றுவிட்டு கடந்த 7-ம் தேதி விடுதிக்கு வந்துள்ளார். பின்னர் கல்லூரி சென்று தேர்வு எழுதிவிட்டு விடுதிக்கு வந்தவர் மின்விசிறியில் தூக்கு போட்டுக்கொண்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மாணவி பார்த்துவிட்டு சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் வந்து நித்யாவை காப்பாற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நித்யாவிற்கு முதல் உதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நித்யா இறந்து விட்டார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News