செய்திகள்

செஞ்சி கோட்டை மீது ஏறி நின்று உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்- 65 பேர் கைது

Published On 2018-04-23 17:27 GMT   |   Update On 2018-04-23 17:27 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி செஞ்சி கோட்டை மீது ஏறி நின்று உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தை சேர்ந்த விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வர்கள் சுற்றுலா பயணிகள் போல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டைக்கு வந்தனர்.

அவர்கள் நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு, 700 அடி உயரமுள்ள செஞ்சி கிருஷ்ணகிரி கோட்டையில் 350 அடி உயரத்துக்கு ஏறி சென்றார்கள்.

பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து கொண்டு சென்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தை சேர்ந்த 65 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்தால் செஞ்சி கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News