செய்திகள்

தளி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-04-23 16:48 GMT   |   Update On 2018-04-23 16:48 GMT
தளி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தளி:

தளி அருகே தேவனூர்புதூர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து கணக்கம்பாளையம் மற்றும் பூலாங்கிணர் ஆகிய குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேவனூர்புதூருக்கு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த 20 நாட்களாக சரியாக வழங்கப்படவில்லை. இதனால் தேவையான அளவு குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், காலிக்குடங்களுடன் தேவனூர்புதூர் பஸ்நிலையம் அருகே நேற்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் உடுமலை- ஆனைமலை சாலையில் அமர்ந்து, குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி சண்முகவதி தலைமையிலான ஒன்றிய அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, தேவனூர்புதூர் கிராமத்திற்கு சீரான இடைவெளியில் குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News