செய்திகள்

துபாயில் இருந்து கடத்தப்பட்ட ரூ.17 கோடி டீசல் - சென்னை துறைமுகத்தில் பறிமுதல்

Published On 2018-04-21 13:12 GMT   |   Update On 2018-04-21 13:12 GMT
துபாயில் இருந்து கப்பலில் கடத்திவந்த 17.7 கோடி ரூபாய் மதிப்பிலான டீசல் பீப்பாய்களை பறிமுதல் செய்த வருவாய்த்துறை புலனாய்வு அதிகாரிகள் 5 பேரை கைது செய்தனர்.
சென்னை:

வெளிநாடுகளில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் இந்தியாவுக்கு பெட்ரோலிய தயாரிப்புகளை இறக்குமதி செய்வது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. இதனால், வேறுவகை திரவங்கள் என்னும் போலி அடையாளத்துடன் வளைகுடா நாடுகளில் இருந்து சிலர் கள்ளத்தனமாக பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்து கள்ளச்சந்தையில் விற்று, லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

இதற்காக அந்நாடுகளில் உள்ள இடைத்தரகர்கள் மூலமாக போலி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு, அவற்றுக்கான தொகை ஹவாலா பரிமாற்ற முறையில் வழங்கப்படுகிறது. மேலும், சுங்கவரி விதிப்பை ஏய்க்கும் வகையில் மிக குறைந்த விலை மதிப்பில் ரசீதுகள் தயாரிக்கப்படுகின்றன.

அவ்வகையில், சென்னையில் உள்ள சிலரால் தாது எரிச்சாராயம் (mineral spirit) என்ற போலி அடையாளத்துடன் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் மூன்றரை லட்சம் லிட்டர் டீசல் தமிழ்நாடு, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வருவாய்த்துறை புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சென்னை துறைமுகத்தில் கடந்த 17-ம் தேதி நடத்திய அதிரடி சோதனையில் பிடிபட்டது.

துபாயில் இருந்து கப்பல் மூலம் 14 கண்டெய்னர்களில் கடத்தி வரப்பட்ட டீசலை பறிமுதல் செய்த அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News