செய்திகள்

ரஜினி மக்கள் மன்ற கிளைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2018-04-20 03:14 GMT   |   Update On 2018-04-20 03:14 GMT
ரஜினி மக்கள் மன்றத்துக்கு இதுவரை 8 ஆயிரத்து 500 நிர்வாகிகள் நியமனம் செய்துள்ள நிலையில், கிளைகள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

ரஜினி மக்கள் மன்றத்துக்கு இதுவரை 8 ஆயிரத்து 500 நிர்வாகிகள் நியமனம் செய்துள்ள நிலையில், கிளைகள் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பு இருக்கும் எனவும் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம் அண்மையில் நிறைவடைந்தது. கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட, நகர, ஒன்றியங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் முடிவு அடைந்துள்ளது. அதன்படி, தற்போது 8 ஆயிரத்து 500 நிர்வாகிகள் ரஜினி மக்கள் மன்றத்தில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அடுத்தகட்டமாக தமிழ்நாடு முழுவதும் 65 ஆயிரத்து 500 மன்ற கிளைகளை அமைக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அதற் கான ஆய்வு கூட்டம் சென்னை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் நடை பெற்றது. சுமார் 20 சதவீதம் மன்ற கிளைகளுக்கான பணிகள் முடிவு அடைந்து உள்ளது.

மன்ற கிளைகளுக்கான பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் கிளை அமைப்புகள் தொடங்கப்பட்டதும், அரசியல் கட்சி அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். 
Tags:    

Similar News