செய்திகள்

சூளகிரி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கட்டிட மேஸ்திரி பலி

Published On 2018-04-18 14:43 GMT   |   Update On 2018-04-18 14:43 GMT
சூளகிரி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கானலட்டி கிராமத்தை சேர்ந்த மரியப்பா என்பவரது மகன் வெங்கடேஷ் (வயது 27). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இவர், தனது நண்பர் மாலிகப்பா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். வண்டியை மாலிகப்பா ஓட்டி சென்றார்.

அப்போது பிண்டேகானபள்ளி அருகில் சென்றபோது அந்த வழியாக ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வெங்கடேஷ் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி, அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது. நண்பர் மாலிகப்பாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் வெங்கடேஷ் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அருகே சந்தாபுரா என்ற இடத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
Tags:    

Similar News