செய்திகள்

மரக்காணம் அருகே நடுரோட்டில் வேன் கவிழ்ந்தது - 15 பேர் காயம்

Published On 2018-04-17 10:44 GMT   |   Update On 2018-04-17 10:44 GMT
மரக்காணம் அருகே இன்று காலை நடுரோட்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 15 பேர் காயம் அடைந்தனர்.
மரக்காணம்:

புதுவை காலாப்பட்டில் தனியார் கம்பெனி உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களை கம்பெனிக்கு அழைத்து செல்வதற்கு மரக்காணத்தில் இருந்து தினமும் வேன் புறப்பட்டு காலாப்பட்டுக்கு செல்வது வழக்கம்.

அதன்படி ஊழியர்களை அழைத்து செல்வதற்காக இன்று காலை வேன் மரக்காணத்துக்கு வந்தது. அதில் 18 ஊழியர்கள் ஏறினர். பின்னர் அந்த வேன் அங்கிருந்து காலாப்பட்டுக்கு புறப்பட்டது. மரக்காணம் அருகே கீழ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் வேனில் வந்த 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே விபத்தில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்த போலீசார் கால தாமதமாக வந்ததாக கூறி கீழ்பேட்டை பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். அதற்குள் போலீசார் வந்ததால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News