செய்திகள்

சேலம் கொண்டலாம்பட்டியில் பெயிண்டர் அடித்துக்கொலை

Published On 2018-04-17 10:31 GMT   |   Update On 2018-04-17 10:31 GMT
சேலம் கொண்டலாம்பட்டியில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் கொண்டலாம்பட்டி புத்தூர் அக்ரஹாரம் மலங்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 50).பெயிண்டர்.

இவரது மகன் பூபதி (வயது 25). தறி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் பெற்றோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக வும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் பூபதி மீண்டும் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார். இதை பார்த்த சுப்ரமணி அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த பூபதி, சுப்ரமணியை தாக்கி கீழே தள்ளினார்.

கீழே விழுந்த சுப்ரமணியின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சற்று நேரத்தில் சுப்ரமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

இதை பார்த்த பூபதி, சுப்ரமணியின் மனைவி சரஸ்வதி (42) மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். தகவல் அறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. கொண்டலாம்பட்டி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

சுப்ரமணி உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது தொடர்பாக பூபதியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. இந்த சம்பவம் இன்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News