கவர்னர் மாளிகைக்கு மெத்தை, தலையணை வாங்கியதில் ரூ.10 கோடி மோசடி - 2 பேர் கைது
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அலங்கார பொருட்கள், மெத்தை, தலையணை, ஜன்னல் ஸ்கீரீன் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை அடையாறை சேர்ந்த தொழில் அதிபர் முகமது யூனுஸ் என்பவர் வழங்கி வந்தார்.
அவர் கடந்த 5 ஆண்டுகளாக பொருட்களை கொடுக்காமலேயே ரசீசு வழங்கி ரூ.10 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக கவர்னர் மாளிகை அதிகாரிகள் கிண்டி போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குபதிவு செய்து முகமது யூனுசை கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி கைது செய்தனர்.
இந்த மோசடியில் கவர்னர் மாளிகை ஊழியர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கவர்னர் மாளிகையின் உதவியாளராக பணி புரியும் ராஜேஷ், வீட்டு வேலை பார்த்து வந்த ஜஸ்டின் ராஜேஷ் ஆகியோர் மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. அவர்கள் பொருட்கள் வாங்கியதாக போலியாக பில் பெற்று ரூ.10 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். #Governorhouse