search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் மாளிகை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட தமிழிசைக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
    • இந்திய நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்தை கொடுத்தது நான்தான்.

    புதுச்சேரி:

    புதுவையின் பொறுப்பு கவர்னராக இருந்த தமிழிசை நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று புதுவைக்கு வந்த தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி மக்கள் என் மீது அபரீதமான அன்பை பொழிந்தார்கள். இந்த அன்பு என்றும் தொடரும். புதுச்சேரிக்கும், எனக்கும் உள்ள தொடர்பு தொடரும். வாழ்க்கையில் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

    பிரதமர், உள்துறை அமைச்சர், ஜனாதிபதி ஆகியோருக்கு நன்றி. புதுச்சேரிக்கு வந்தது மறக்க முடியாத நிகழ்வு. தமிழில் பதவிப்பிரமாணம் எடுக்க முடிந்தது.

    தமிழில் கவர்னர் உரையாற்றியுள்ளேன். கவர்னராக பல திட்டங்களை செயல்படுத்த முடிந்தது. 3 மாதம் பொறுப்பு என கூறினார்கள். ஆனால் 3 ஆண்டுகளாகி விட்டது. அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதைவிட மக்களுக்கு அதிகமாக சேவை செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வோடு செல்கிறேன். ராஜினாமா செய்தது நானே எடுத்த முடிவு. தெலுங்கானாவில் கவர்னர் மாளிகை ஊழியர்கள் அழுது கொண்டே வழியனுப்பினர். 300 பேர் அங்கு கவர்னருக்காக பணியாற்றுகின்றனர். அந்த வாழ்க்கையை விட்டு விட்டு பொது வாழ்க்கைக்கு வருவதற்கான அன்பை புரிந்து கொள்ள வேண்டும். சுயநலத்துக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.


    கவர்னர் மாளிகை மக்கள் பவனமாகத்தான் இருந்தது. இன்னும் மக்களுக்கு நேரடி தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தில் ராஜினாமா செய்தேன்.

    நான் தமிழகத்தை சேர்ந்த தமிழ் மகள். என்னை அந்நிய மாநிலமாக பார்க்காதீர்கள் என கோரிக்கை வைத்தேன். நாளை பா.ஜனதா கட்சி அலுவலகம் செல்கிறேன். அவர்கள் முடிவை ஏற்பேன்.

    புதுச்சேரி மக்கள் என்னை புறக்கணிக்கவில்லை, அவர்கள் என் மீது அதிக அன்பு வைத்துள்ளனர். வரும் காலத்தில் புதுச்சேரி முதலமைச்சர், கவர்னரிடம் பல்வேறு ஆலோசனைகளை தொடர்ந்து கூறுவேன். பெண்கள் பாதுகாப்பாக என் குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

    எனது பலம் மக்கள் அன்பு, பாசம், என் மீது உள்ள நம்பிக்கை, கடவுள் மீது உள்ள நம்பிக்கை. எதிர் வினைகளை, விமர்சனங்களை தூசிபோல தட்டி விட்டு செல்வது என் பலம்.

    இந்த பலம் எனக்கு கைகொடுக்கும். எனது விருப்பம் மக்கள் தொடர்பு தான். நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கிருந்து செல்கிறேன். மக்கள் பணியிலிருந்து என்னை பிரிக்க முடியாது.

    எனது மக்கள் பணி தொடரும். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதே என் எண்ணம். அவரால்தான் இந்திய நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்தை கொடுத்தது நான்தான்.

    அதுதான் என் முழு முதல் கவனமாக இருக்கும். மக்களுக்கான எனது கவர்னர் பணிக்கு எந்த உள்ளர்த்தமும் கற்பிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து தமிழக அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கருத்து உட்பட பல்வேறு கேள்விகளுக்கு சிரிப்பை மட்டுமே தமிழிசை பதிலாக அளித்தார்.

    கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட தமிழிசைக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து தலைமை செயலர் சரத்சவுகான், காவல் துறை தலைவர் ஸ்ரீநிவாஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கவர்னர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் அவரை வழி அனுப்பி வைத்தனர்.

    • கவர்னர் மாளிகை அருகே அக். 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
    • கவர்னர் மாளிகையில் கிண்டி நுழைவுவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு கடந்த அக்டோபர் மாதம் 25-ந்தேதி பெட் ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பிரபல ரவுடியான கருக்கா வினோத் 4 பாட்டில்களில் பெட்ரோல்களை நிரப்பிக்கொண்டு கவர்னர் மாளிகையின் பிரதான நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினான்.

    இதில் 2 பெட்ரோல் குண்டுகள் வாசல் அருகே சற்று தூரத்தில் விழுந்து வெடித்து சிதறியது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கருக்கா வினோத்தை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை நோக்கியும் கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசினான்.

    இந்த குண்டுகள் கவர்னர் மாளிகை அருகில் செடிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் போய் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இப்படி பரபரப்பான நேரத்தில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எழுந்த கோரிக்கையையடுத்து மத்திய அரசு என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

    கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கருக்கா வினோத்தின் பின்னணியில் சிலர் இருப்பதாகவும் அவர்கள் யார்-யார்? என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஏற்கனவே கோரிக்கை எழுந்திருந்த நிலையில் அது தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கிண்டி கவர்னர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    தடயவியல் நிபுணர்களின் துணையுடன் சுமார் 1 மணி நேரம் ஆய்வு செய்த அதிகாரிகள் கருக்கா வினோத் எங்கிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசினான்? அது எந்தெந்த இடங்களில் போய் விழுந்து வெடித்தது? என்பது போன்ற விவரங்களை கேட்டறிந்தனர்.

    இது தொடர்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அன்று பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரரான சில்வானுவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் கூடுதலாக விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதற்காக காவலர் சில்வானுவை விசாரணைக்காக தங்களுடன் அழைத்துச் சென்றனர். புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதற்கிடையே ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கருக்கா வினோத்துக்கு எத்தனை நாட்கள் என்.ஐ.ஏ. காவல் கிடைக்கும் என்பது தெரிய வரும். அதன் பின்னர் கருக்கா வினோத்தை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    • ஏஐடியூசி., மாவட்ட அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • எல்பிஎப்., ஐஎன்டியூசி., எம்எல்எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள ஏஐடியூசி., மாவட்ட அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச்செயலாளா் பி.ஆா்.நடராஜன் தலைமை தாங்கினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினா் கூறியதாவது:- மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக விவசாயிகள், தொழிலாளா்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவது, வேளாண் பொருள்களுக்கு நியாயமான விலை வழங்க மறுப்பது ஆகியவை சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது. ஆகவே, பாஜக., அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சாா்பில் சென்னைஆளுநா் மாளிகை முன்பாக வருகிற 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் தொடா் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க வேண்டும். மேலும், இப்போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூா் குமரன் சிலை முன்பாக 28-ந் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா். இதில் ஏஐடியூசி., சிஐடியூ., எல்பிஎப்., ஐஎன்டியூசி., எம்எல்எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. வெடி பொருட்கள் தடுப்பு சட்டம், கூட்டு சதி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.
    • மாநில போலீசாரிடம் இருந்து கருக்கா வினோத் வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும்.

    சென்னை:

    சென்னை கிண்டி கவர்னர் மாளிகை முன்பு கடந்த மாதம் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக கவர்னர் மாளிகை தரப்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருக்கா வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கருக்கா வினோத் பின்னணியில் சில தடை செய்யப்பட்ட அமைப்புகள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை என்னும் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த பா.ஜ.க. தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை அனுப்பினார். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. வெடி பொருட்கள் தடுப்பு சட்டம், கூட்டு சதி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.

    இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் கேட்ட போது, கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் மனுதாக்கல் செய்யப்படும். இதுபற்றி மத்திய உளவுப் பிரிவுக்கு என்.ஐ.ஏ. தெரிவிக்கும். இதையடுத்து தமிழக டி.ஜி.பி.க்கு அவர்கள் தகவல் தெரிவிப்பார்கள்.

    அதன் பின்னர் மாநில போலீசாரிடம் இருந்து கருக்கா வினோத் வழக்கு ஆவணங்கள் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்படும். அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்ற விசாரணை தொடரும். கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, ஜெயிலில் அவனிடம் யார்-யார் பழகினார்கள். வெளியில் இருந்து அவனை இயக்கினார்களா? என விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கிண்டி போலீசாருடன் என்.ஐ.ஏ. போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி விட்டதாக கூறப்படுகிறது.
    • தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே என்.ஐ.ஏ. போலீசார் விசாரணை நடத்தலாம்.

    சென்னை:

    சென்னை கிண்டி கவர்னர் மாளிகை அருகே கடந்த மாதம் 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் (வயது 42) என்ற ரவுடியை கிண்டி போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    நீட் தேர்வுக்கு எதிராக இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாக கருக்கா வினோத் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் கருக்கா வினோத் மீது கடந்த வாரம் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை ஒரு ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். சென்னை பா.ஜனதா தலைமை அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு கருக்கா வினோத் மீது ஏற்கனவே நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி என்.ஐ.ஏ. போலீசார் இந்த வழக்கை எடுத்து நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளதாகவும், அதன்படி இந்த வழக்கில் புதிதாக விசாரணையை தொடங்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்த தகவலை தமிழக போலீசார் குறிப்பாக சென்னை போலீசார் மறுக்கவில்லை.

    இந்த சம்பவம் நடந்தவுடன் கிண்டி போலீசாருடன் என்.ஐ.ஏ. போலீசாரும் ஏற்கனவே விசாரணை நடத்தி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக விசாரணையை தொடங்கும் பட்சத்தில் புதிதாக என்.ஐ.ஏ. போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    பொதுவாக தமிழக போலீசார் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்க, தமிழக அரசின் அனுமதி தேவை. ஆனால் முக்கியமான வழக்காக கருதினால், தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே என்.ஐ.ஏ. போலீசார் விசாரணை நடத்தலாம்.

    அந்த வகையில் இந்த வழக்கை என்.ஐ.ஏ. போலீசார் விசாரணைக்கு எடுத்திருக்கலாம் என்றும், அதுபற்றிய தகவலை மாநில அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும், ஆனால் அதுபோன்ற கடிதம் எதுவும் வரவில்லை என்றும், தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று மாலை தெரிவித்தனர்.

    ஆனால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக, கோர்ட்டில் என்.ஐ.ஏ. போலீசார் தெரிவித்து இருக்கலாம் என்றும் அந்த உயர் அதிகாரிகள் கூறினார்கள். எது எப்படி இருந்தாலும், முறைப்படி என்.ஐ.ஏ. போலீசார் எங்களுக்கு தகவல் தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சென்னை போலீசாரிடம் இருந்து கட்டாயம் பெற வேண்டும், என்றும் மேலும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

    • கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
    • சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    சென்னை :

    கிண்டி கவர்னர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக கருக்கா வினோத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

    இதையடுத்து கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், கருக்கா வினோத்தை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.

    முன்னதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கருக்கா வினோத்தை அழைத்து வந்தபோது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அவர் முழக்கமிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • கருக்கா வினோத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    சென்னை:

    கிண்டி கவர்னர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக கருக்கா வினோத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் (30-ந் தேதி) நடைபெற உள்ளது.

    அன்றுதான் கருக்கா வினோத்துக்கு எத்தனை நாட்கள் போலீஸ் காவல் கிடைக்கும் என்பது தெரியும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவர்னர் மாளிகை தெரிவித்தது போல ஒன்றுக்கும் மேற்பட்ட மர்மநபர்கள் வரவில்லை.
    • கவர்னர் மாளிகை காவலர்கள் யாரும் அவரை பிடிக்கவில்லை.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று முன்தினம் பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கவர்னர் மாளிகை தாக்குதல் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கவர்னர் மாளிகை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விரிவான அறிக்கையை நேற்று மாலை வெளியிட்டார். அதில் கவர்னர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள டி.ஜி.பி. கவர்னர் மாளிகைக்கும், கவர்னருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கவர்னர் மாளிகை தரப்பில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்று பெட்ரோல் குண்டை வீசி சென்றதாக கூறப்படும் டுவிட்டர் பதிவு இடம் பெற்று இருந்தது.

    இதன் பின்னர் கருக்கா வினோத் தனியாக கையில் ஒரு பையை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. நந்தனம் சிக்னலில் இருந்து சைதாப்பேட்டை வழியாக கவர்னர் மாளிகைக்கு நடந்தே சென்று கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசும் காட்சிகளும் போலீசார் அவனை மடக்கி பிடிக்கும் காட்சிகளும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்று இருந்தன.

    இது தொடர்பாக கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது, "கவர்னர் மாளிகை தெரிவித்தது போல ஒன்றுக்கும் மேற்பட்ட மர்மநபர்கள் வரவில்லை. கருக்கா வினோத் மட்டுமே வந்து பெட்ரோல் பாட்டில்களை வீசி உள்ளார். அவர் உள்ளே நுழைவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கவர்னர் மாளிகை காவலர்கள் யாரும் அவரை பிடிக்கவில்லை. போலீசார் 5 பேர்தான் கருக்கா வினோத்தை பிடித்துள்ளனர்" என்றார்.

    • கவர்னர் மாளிகை முன்பு தாக்குதல் என்பது அரசியல் அமைப்பின் மீது நடத்திய தாக்குதல்.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தாலும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாட்டோம்.

    நெல்லை:

    நெல்லை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை இன்று சந்தித்தபோது கூறியதாவது:-

    தமிழக கவர்னர் இல்லம் முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்பவரை தி.மு.க. வழக்கறிஞர்கள் 2 பேர் தான் ஜாமின் எடுத்துள்ளனர். ஜாமின் எடுத்த இசக்கி பாண்டியன் மற்றும் நிசிந்த் 2 பேரும் தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது.

    தமிழக ஆளுநருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. அப்படி இருக்கும்போது சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகி உள்ளது. ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசுவதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெட்ரோல் குண்டு வீசியவனுக்கு பின்னணியில் யார்? இருக்கிறார்கள். அந்த குற்றவாளியின் பின்புலம் என்ன என்பதை சி.பி.ஐ. விசாரித்தால்தான் முழுமையாக உண்மை நிலவரம் தெரியவரும்.

    கோவையில் பாலஸ்தீன கொடியை ஏற்றுகிறார்கள். தமிழக காவல்துறை இதையெல்லாம் வேடிக்கை பார்க்காமல் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னர் மாளிகை முன்பு தாக்குதல் என்பது அரசியல் அமைப்பின் மீது நடத்திய தாக்குதல். தி.மு.க.வினருக்கு அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை கிடையாது.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தாலும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாட்டோம். கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் இதுவரை எந்த மாநில அரசுகள் மீதும் கை வைத்ததில்லை. 356 பிரிவை பயன்படுத்தும் எண்ணம் இந்த அரசுக்கு கிடையாது. தமிழகத்தில் இன்று அரசியல் அமைப்பு சட்டம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    தமிழக கவர்னர் மாளிகை வெளியே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு காவல்துறையை பொறுப்பில் வைத்துள்ள தமிழக முதலமைச்சர் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசாரின் அலட்சியம் காரணமாக பாதுகாப்பு சீர்குலையும் அளவுக்கு சென்றுள்ளது என்று கவர்னர் மாளிகை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக கவர்னர்-தமிழக காவல்துறை இடையே காரசாரமான அறிக்கை மோதல்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்த விவகாரத்தில் கவர்னர் கேட்பது என்ன? காவல்துறை தரப்பில் கூறி வரும் விளக்கம் என்ன? என்பதை பார்க்கலாம்.

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகை தரப்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன.

    * கவர்னர் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளதாகவும், 1-ம் எண் வாயில் வழியாக பெட்ரோல் குண்டுகளுடன் மர்மநபர்கள் ஊடுருவ முயன்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கு பதில் அளித்து உள்ள காவல்துறையினர் கவர்னர் மாளிகையினுள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் நுழைய முற்பட்டதாகவும் பெட்ரோல் குண்டு வெடித்தது என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    * தி.மு.க. தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பொதுக்கூட்டம் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக அவதூறாக மிரட்டல் விடுத்து பேசி வருகிறார்கள். தர்மபுரம் ஆதின நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்க சென்ற போது கல்-தடியால் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இது தொடர்பாக புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கு காவல் துறை அளித்துள்ள விளக்கத்தில் கவர்னரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், அது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது. கவர்னரின் வாகனம் சென்ற பிறகே சிலர் கருப்புக் கொடிகளை சாலையில் வீசினார்கள்.

    இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    * கவர்னர் மாளிகை மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில் 124 ஐ.பி.சி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கூறி இருந்த போதிலும் அவசர கதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நாசக்கார செயலாக வழக்கை நீர்த்துப் போகச் செய்துள்ளனர் என்று கவர்னர் மாளிகை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இதற்கு பதில் அளித்து உள்ள காவல் துறையினர், காவலர்கள் விழிப்புடன் இருந்து செயல்பட்டதால் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    124 சட்டப்பிரிவு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில் தேவைப்பட்டால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    * போலீசாரின் அலட்சியம் காரணமாக பாதுகாப்பு சீர்குலையும் அளவுக்கு சென்றுள்ளது என்று கவர்னர் மாளிகை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு விளக்கம் அளித்துள்ள போலீசார் கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழக கவர்னர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • தண்டனைகள் கடுமையாகும்போது தான் குற்றச்செயல்கள் குறையும்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    சென்னை கிண்டியிலுள்ள தமிழக கவர்னர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை எதிர்க்கட்சிகள் பலமுறை சுட்டிக்காட்டியும் ஆளும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்ததின் விளைவாகதான் ஆளுனர் மாளிகை வாசலில் குண்டு வெடித்துள்ளது.

    இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான உண்மை குற்றவாளியையும் அதற்கு காரணமாக மூளையாக இருந்து செயல்பட்ட சமூக விரோதியையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தண்டனைகள் கடுமையாகும் போது தான் குற்றச்செயல்கள் குறையும் என்பதை அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கருக்கா வினோத்தை பிடிக்க சென்ற போலீசார் மீதும் கருக்கா வினோத் இன்னொரு பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசினார்.
    • கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகள் விழுந்து வெடிக்கவில்லை என்பது போன்றே தகவல்கள் பரவி வந்தன.

    சென்னை:

    சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் போது நடந்தது என்ன? என்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கிண்டி போலீஸ் நிலையத்தில் கருக்கா வினோத் மீது போடப்பட்டு உள்ள எப்.ஐ.ஆரில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-

    கவர்னர் மாளிகையில் பிரதான நுழைவு வாயிலான எண்.1-ல் போலீசார் பணியில் இருந்த போது, கருக்கா வினோத் என்பவர் எதிரில் உள்ள நடைபாதையில் இருந்து 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் (பெட்ரோல் குண்டு) தீப்பற்ற வைத்து வீசினார். முதல் பாட்டில் நுழைவு வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த தடுப்பு (பேரி கார்டு) அருகே வந்து விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது.

    அப்போது கருக்கா வினோத்தை பிடிக்க சென்ற போலீசார் மீதும் கருக்கா வினோத் இன்னொரு பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசினார். அது அருகில் உள்ள பூந்தோட்ட தடுப்பு சுவர் மீது விழுந்தது. அப்போது போலீசாரை பார்த்து என்னை பிடிக்க வந்தீர்கள் என்றால் உங்க மேலேயும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசி விடுவேன் என்று கருக்கா வினோத் மிரட்டல் விடுத்தார்.

    இவ்வாறு எப்.ஐ.ஆரில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    கிண்டி கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகள் விழுந்து வெடிக்கவில்லை என்பது போன்றே தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை பார்க்கும் போது கவர்னர் மாளிகை அருகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலேயே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

    இதற்கிடையே கவர்னர் இந்த சம்பவம் தொடர்பாக 124 ஐ.பி.சி. (கவர்னர் மீது தாக்குதல்) சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றி போலீசாரிடம் கேட்டபோது அதுபற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசிதது முடிவு எடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.

    ×