செய்திகள்

தேவிபட்டினத்தில் படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மரணம்

Published On 2018-04-11 17:00 GMT   |   Update On 2018-04-11 17:00 GMT
தேவிபட்டினத்தில் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவர் மூச்சுத்திணறி இறந்தார். அவரின் உடல் மீட்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பனைக்குளம்:

தேவிபட்டினம் படையாச்சி தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). மீனவர். இவருக்கு பாகம்பிரியாள் என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் நடராஜன் தேவிபட்டினம் நவபாசானம் கடற்கரையில் இருந்து நேற்று அதிகாலை தனது உறவினருக்கு சொந்தமான சிறிய நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

அப்போது கடலில் வீசியிருந்த வலையை இழுக்க முயன்ற போது நிலைதடுமாறி கடலுக்குள் தவறி விழுந்தார். அதில் அவர் மூச்சுத்திணறி இறந்து போனார். வழக்கமான நேரத்துக்கு அவர் கரை திரும்பாததை அறிந்த மற்ற மீனவர்கள் அவரை தேடி கடலுக்குள் சென்றனர். அப்போது அவர் சென்ற படகு மட்டும் கடலில் நின்று கொண்டிருந்தது.

இதையடுத்து மீனவர்கள் முத்துப்பாண்டி, முகமது கனி ஆகியோர் படகு நின்ற இடத்தில் இருந்து கடலுக்குள் குதித்து தேடினர். அப்போது படகின் அருகில் தண்ணீருக்குள் நடராஜன் உடல் இருப்பதை பார்த்து, அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்த தேவிபட்டினம் மரைன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News