செய்திகள்

தனியார் பள்ளி சமையல் உதவியாளர் எரித்து கொலையா?- போலீசார் விசாரணை

Published On 2018-04-06 14:23 GMT   |   Update On 2018-04-06 14:23 GMT
வேப்பந்தட்டை அருகே தனியார் பள்ளி சமையல் உதவியாளர் மண்எண்ணெயை ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 50). இவர் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் துரைசாமி இறந்து விட்டார். ஜெயந்திக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் ஜெயந்தி மட்டும் வெங்கலத்தில் தனியாக வசித்து வந்தார். 

இந்நிலையில் நேற்று ஜெயந்தி வீட்டின் அருகே வயல்வெளியில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயந்தியை யாரும் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொலை செய்தனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News