கப்பலூர் அருகே மகனுடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
பேரையூர்:
திருமங்கலம் ஜவகர் நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 35).
கணவர் இறந்துவிட்ட நிலையில், கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பேச்சியம்மாள் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று வேலை முடிந்ததும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
கப்பலூர் பாலம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் ஹெல்மெட் அணிந்திருக்க, மற்றொருவன் முகத்தை கைக்குட்டையால் மறைத்திருந்தான். அவர்கள் பேச்சியம்மாள் சென்ற மோட்டார் சைக்கிளை கடந்தபோது, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இந்த செயலால் தாயும், மகனும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்ட பேச்சியம்மாளின் மகன் வெற்றிவேல், நகை பறிப்பு திருடர்களை விரட்டிச் சென்றார்.
மாட்டுத்தாவணி செல்லும் சாலையில் வலையங்குளம் வரை விரட்டிச் சென்றார். ஆனால் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.
சம்பவம் குறித்து, திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். #tamilnews