பெரியபாளையம்:
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் எதிரே பக்தர்கள் தங்கும் தனியார் விடுதியில் கடந்த 24-ந்தேதி சனிக்கிழமை சுமார் 40 வயது மதிக்க தக்க பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது காது, மூக்கு, வாய் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயத்துடன் ரத்தம் வழிந்து இருந்தது.
அந்த பெண்ணுடன் வயதான தம்பதியினர் வந்து வெள்ளிக்கிழமை இரவே அறை எடுத்து தங்கியுள்ளனர். இதுபற்றி விடுதியின் மேற்பார்வையாளர் முன்னுக்கு பின் முரனான தகவல்களை போலீசாரிடம் கூறி வருகிறார்.
இதனால் கொலையுண்டவர் யார்? அவருடன் தங்கியிருந்த தம்பதியார் என்பது குறித்து விசாரிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பெரியபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் வயதான தம்பதி சென்னை மார்க்கத்தில் இருந்து பெரியபாளையம் மேம்பாலம் வழியாக தனியார் தங்கும் விடுதி நோக்கி நடந்து வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதனால் இந்த வயதான தம்பதியினர் சென்னையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இருப்பினும் கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் வந்தவர்களின் முகம் கேமிராவில் தெளிவாக பதிவாகவில்லை. அவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விடுதிகளில் யார்-யார்? தங்கி இருந்தனர் என்ற விபரத்தை விடுதி ஊழியர்கள் முறையாக புத்தகத்தில் பதிவு செய்யவில்லை. இது கொலையாளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
தப்பிய தம்பதி இறந்த பெண்ணின் மாமியார்- மாமனாரா? அல்லது தாய்-தந்தையரா? அவர்கள் என்ன ஆனார்கள் என்று பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews