செய்திகள்

சபாநாயகர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு- நியமன எம்.எல்.ஏ. சாமிநாதன் அறிவிப்பு

Published On 2018-03-26 07:43 GMT   |   Update On 2018-03-26 07:43 GMT
சபாநாயகர் வைத்திலிங்கம் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று நியமன எம்.எல்.ஏ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். #Puducherryassembly
புதுச்சேரி:

சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்காததால் நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரும் சட்டசபை நுழைவு வாயில் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு புதுவை சட்டசபைக்கு எங்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது செல்லும் என சென்னை ஐகோர்ட்டு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

உச்சபட்ச அதிகாரம் படைத்த கோர்ட்டு தீர்ப்பை சபாநாயகர் அமல்படுத்தாமல் அவமதித்துள்ளார். அவர் எங்களுக்கு அனுப்பியதாக கூறி உள்ள கடிதத்தில் தன்னிடம் கோர்ட்டு கருத்து கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.

அவர் தன்னை கடவுளாக பாவித்து நடந்து கொள்கிறார். சபாநாயகர் வைத்திலிங்கம் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவோம். எங்களை தடுத்த சபை காவலர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே அறியாமல் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.

இதே போல் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு முதல்-அமைச்சர் நாராயணசாமியின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டார். இந்த அரசு காவல்துறை துணையோடு அராஜகத்தை அரங்கேற்றி உள்ளது. எங்களை தடுத்ததன் மூலம் இந்த அரசு சட்ட படுகொலை செய்துள்ளது. ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. இதற்கு இந்த அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் வளர்ச்சியே இல்லாமல் ஆகி விட்டது. இங்கு சட்டமன்றத்தில் உள்ள அமைச்சர்கள் ஊழல் வாதிகள். இவர்களுக்கு வருங்காலத்தில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். இந்த சட்டசபை கூட்டத் தொடர் முடியும் வரை நாங்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Puducherryassembly #tamilnews

Tags:    

Similar News