காந்தல்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், நடுவட்டம், அவலாஞ்சி, அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
கோத்தகிரியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. ஊட்டியில் இரவு 10.30 மணி முதல் மழை பெய்தது. இன்றுஅதிகாலை வரை மழை நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
இன்று காலை மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
ஊட்டியில் இன்று ரம்யமான சூழ்நிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கேரளா, கர்நாடகா, மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளை கண்டுகளித்தனர்.