செய்திகள்

சென்னையில் 10 ஆயிரம் போலீசாருக்கு யோகா பயிற்சி

Published On 2018-03-24 06:30 GMT   |   Update On 2018-03-24 06:30 GMT
மன அழுத்தத்தை போக்க சென்னையில் இன்று 13 இடங்களில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த பயிற்சியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பங்கேற்றனர்.
சென்னை:

மன அழுத்தத்தின் காரணமாக போலீசார் தற்கொலை முயற்சி, தற்கொலை போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருவது காவல் துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதனால் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இரவு-பகல் என தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு மன இறுக்கம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்று உளவியல் ரீதியாக கூறப்படுகிறது.

இதனால் போலீசாருக்கு உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்பதை அறிந்து காவல்துறை உயர் அதிகாரிகள் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

சென்னையில் இன்று 13 இடங்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த பயிற்சியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பங்கேற்றனர். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.


அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பங்கேற்ற இந்த யோகா பயிற்சி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது.

இது குறித்து போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், காவல் துறை பணி உடலுக்கும் மனதுக்கும் அழுத்தம் ஏற்படுத்தும் பணியாக உள்ளது. அதனை போக்குவதற்கு யோகா பயிற்சி அவசியமாகிறது.

போலீசார் தங்கள் பணியில் தினமும் புத்துணர்வுடன் செயல்பட சிறிது நேரம் ‘யோகா’ செய்வது நல்லது. சென்னையில் ரூ.10 ஆயிரம் போலீசாருக்கு யோகா பயிற்சி ஒன்று அளிக்கப்பட்டது. அடுத்த வாரமும் இந்த பயிற்சி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

சென்னை மேற்கு மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு யோகா பயிற்சி திருவேற்காடு அருகே நடைபெற்றது. போக்குவரத்து துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. #Tamilnews
Tags:    

Similar News