செய்திகள்

5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க திட்டம்

Published On 2018-03-21 06:06 GMT   |   Update On 2018-03-21 06:06 GMT
மெட்ரோ ரெயில் சேவையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் 5 நிமிடத்திற்கு ஒரு சேவை வீதம் இயக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. #MetroTrain
சென்னை:

சென்னையில் தற்போது மெட்ரோ ரெயில் சேவை 3 வழித்தடங்கள் மூலம் 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படுகிறது. தினமும் 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

தற்போது ‘பீக் அவர்சில்’ 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயிலும், மற்ற நேரங்களில் 15 நிமிடத்திற்கு ஒரு ரெயிலும் இயக்கப்படுகின்றன. ஷெனாய் நகர் மற்றும் பரங்கிமலை இடையே 13 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் வீதம் இயக்கப்பட்டது. தற்போது 7 நிமிடத்திற்கு ஒன்று வீதம் மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெட்ரோ ரெயில் சேவையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் 5 நிமிடத்திற்கு ஒரு சேவை வீதம் இயக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

காலை மற்றும் மாலை ‘பீக்அவர்சில்’ அதிகரிக்கப்படும் சேவை மூலம் பயணிகளை அதிகம் ஈர்க்க முடியும் என்று கருதி இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் உள்ள பீக்அவர்சில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு சேவை என்ற விகிதத்தில் ரெயில்கள் இயக்கப்படும்.


காலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும், காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7.5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் இந்த அடிப்படையில் மெட்ரோ ரெயில் சேவை அமையும்.

சென்ட்ரல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி விட்டால் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

புறநகர் மின்சார ரெயில் பயணிகளும் அதிகளவு மெட்ரோ ரெயிலை பயன்படுத்தக் கூடும் என்பதால் ஒவ்வொரு 2.5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படும் வகையில் சேவை அதிகரிக்கப்படும்.

தற்போது 13 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இனி கூடுதலாக 12 ரெயில்கள் இயக்கப்படும் என்றார். #Tamilnews
Tags:    

Similar News