செய்திகள்
தனம்

திருக்கோவிலூர் அருகே தாக்கப்பட்ட சிறுமிக்கு சுய நினைவு திரும்பியது

Published On 2018-03-13 07:30 GMT   |   Update On 2018-03-13 07:30 GMT
திருக்கோவிலூர் அருகே மர்மநபர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சுயநினைவு திரும்பியது.
புதுச்சேரி:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய மனைவி ஆராயி (வயது 45). மகள் தனம் (15), மகன் சமயன் (8) ஆகியோர் கடந்த மாதம் 21-ந்தேதி இரவு வீட்டில் படுத்திருந்தபோது மர்ம நபர்கள் தாக்கினார்கள்.

இதில் சமயன் உயிரிழந்தான். ஆராயி, தனம் ஆகியோர் படுகாயத்துடன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் சுயநினைவு அற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் அவர்கள் சுயநினைவு திரும்பவில்லை. இதனால் அதிதீவிர பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு தனம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் கண் விழித்து பார்த்தார். ஆனால் பேசமுடியவில்லை.

இன்று அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்கு முழுமையாக சுய நினைவு திரும்பியது. அவர் எழுந்து உட்கார்ந்தார். அவரால் ஒருசில வார்த்தைகள் மட்டும் பேச முடிகிறது. முழுமையாக பேச முடியவில்லை. பித்து பிடித்தவர் போல அமர்ந்திருக்கிறார்.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் அவர் அபாய கட்டத்தை தாண்டி இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள். அவர் இருக்கும் அதே வார்டில் தாயார் ஆராயியும் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலையும் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அவருக்கு இன்னும் சுய நினைவு திரும்பவில்லை. இருவருக்கும் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News