செய்திகள்
குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு - 6 பேர் கவலைக்கிடம்
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ள நிலையில், படுகாயங்களுடன் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #TheniFire
தேனி:
தேனி மாவட்டம் குரங்கணியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக்கொண்டனர். இரு குழுவினராக இருந்த அவர்கள் தீயில் மாட்டிக்கொண்டனர். உள்ளுர் மக்கள், வனத்துறை, கம்மாண்டோ வீரர்கள், விமானப்படை என மீட்புப்பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.
தற்போது வரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் காயங்கள் இன்றி மீட்கப்பட்டனர். 17 பேர் காயங்களுடன் தேனி மற்றும் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் ஒருவரின் உடல் மட்டுமே தற்போது மீட்கப்பட்டுள்ளது, மீதமுள்ள 8 பேரின் உடல்களும் 50 அடி பள்ளத்தில் உள்ளதால் மீட்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.
உரிய அனுமதி இல்லாமல் மாணவர்கள் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டதாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கூறியுள்ளார். முறையான அனுமதி பெற்றிருந்தால், பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். #TheniFire #TheniForestFire #Kurangani