ரெட்டிச்சாவடி அருகே ஷேர் ஆட்டோ மோதி புதுவை வாலிபர் பலி
பாகூர்:
புதுவை குயவர்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது38). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். ரெட்டிச்சாவடி அருகே கரிக்கன்நகர் என்ற இடத்தில் வந்த போது அந்த வழியாக தாறுமாறாக வந்த ஷேர் ஆட்டோ செந்தில்முருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மேலும் நல்லப்பரெட்டி பாளையத்தை சேர்ந்த வங்கி ஊழியர் தாமோதரன் (55) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீதும் ஷேர் ஆட்டோ மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செந்தில்முருகனும், தாமோதரனும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து தாமோதரன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews