செய்திகள்

கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயம் - பெண் என்ஜினீயருக்கு உதவிக்கரம் நீட்டிய ஆந்திர அரசு

Published On 2018-02-18 05:39 GMT   |   Update On 2018-02-18 05:39 GMT
சோழிங்கநல்லூரில் பெண் என்ஜினீயர் லாவண்யா கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தகவல் அறிந்த ஆந்திர அரசு அவருக்கு உதவிகரம் நீட்ட முன் வைத்துள்ளது.
சென்னை:

ஆந்திராவை சேர்ந்த பெண் என்ஜினீயரான லாவண்யா சென்னை நாவலூரில் உள்ள சாப்ட் வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

தாழம்பூரில் தங்கி இருந்த லாவண்யா கடந்த 13-ந்தேதி இரவு மொபட்டில் ஒட்டியம்பாக்கம் அரசன் கழனிகாரணை சாலையில் சென்ற போது கொள்ளை கும்பல் கத்தியால் அவரது தலையில் தாக்கியது.

ரத்த வெள்ளத்தில் விழுந்த லாவண்யாவிடம் இருந்து நகை, செல்போன், லேப்-டாப், மொபட்டை எடுத்து கொண்டு கொள்ளையர்கள் தப்பினர். மயங்கி கிடந்த அவரை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பள்ளிகரணை போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக செம்மஞ்சேரியை சேர்ந்த விநாயகமூர்த்தி, லோகேஷ், நாராயணமூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாவண்யாவின் செல்போனை பறிமுதல் செய்தனர்.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த லாவண்யாவுக்கு நினைவு திரும்பியது. தன்னை தாக்கியவர்களை சும்மா விடக்கூடாது என்று போலீசாரிடம் கூறி இருந்தார். இதற்கிடையே கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட தகவல் லாவண்யாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் லாவண்யா கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தகவல் அறிந்த ஆந்திர அரசு அவருக்கு உதவிகரம் நீட்ட முன் வைத்துள்ளது. இது தொடர்பாக லாவண்யாவின் தங்கை நாரிஷா கூறியதாவது:-

ஆந்திர அரசு அதிகாரிகள் என்னிடம் போனில் பேசி உதவி செய்ய முன் வந்தனர். ஆனால் இந்த சூழ்நிலையில் உதவிகள் தேவைப்படவில்லை. மருத்துவ செலவுகளை லாவண்யா வேலை பார்த்த நிறுவனம் ஏற்று கொண்டது. அவர் உடல்நலம் தேறி உள்ளார். இதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் சென்னை போலீசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

நிறைய பேர் உதவி செய்வதாக போனில் தெரிவித்து இருந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Tags:    

Similar News