செய்திகள்

தர்மபுரியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு முயற்சி - திருடன் கைது

Published On 2018-01-23 15:59 GMT   |   Update On 2018-01-23 15:59 GMT
தர்மபுரியில் 4வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற திருடனை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களது 4 வயது குழந்தையுடன் தர்மபுரி டவுன் நேதாஜி பைபாஸ் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் ஒருவருடைய திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த திருமண மண்டபத்தில் அவர்களுடைய 4 வயது குழந்தையும், மற்ற குழந்தைகளும் ஓடி ஆடி மகிழ்ச்சியாக விளையாடி கொண்டிருந்தது. இதில் திடீரென அந்த 4 வயது குழந்தை மட்டும் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தங்களது குழந்தையை திருமண மண்டபம் மற்றும் வெளிபுற பகுதிகளில் பதறியடித்தப்படி தேடினர்.

அப்போது மண்டபத்தில் வெளிபுற பகுதியில் உள்ள அடர்ந்த முட்புதரில் குழந்தையை கடத்தி சென்று வாலிபர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் திருமண விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் உடனடியாக ஓடிச் சென்று குழந்தையை மீட்டு, வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த வாலிபர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள வண்ணாத்திப்பட்டி பகுதியை சேர்ந்த நடேசன் மகன் செல்வம் (வயது 19) என்பது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பிடிப்பட்ட வாலிபர் செல்வம் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. ஆள் இல்லாத வீடுகளை நோட்டம் போட்டு, இரவு நேரத்தில் வீட்டின் மேற்கூரையை பிரித்து நகை, பணம் திருடுவது இவனது வாடிக்கையாகும். திருட்டில் கிடைக்கும் நகைகளை கொண்டு சென்று விற்று அந்த பணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஜெயிலில் அடைக்கப்பட்டாலும் ஜாமீனில் வெளிவந்து மீண்டும், மீண்டும் இது போன்ற தொடர் சம்பவங்களில் செல்வம் ஈடுபட்டு வந்தான் என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர் செல்வத்தை கைது செய்தனர். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாலும், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் முன்எச்சரிக்கையை கருத்தில் கொண்டு அவனை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்காக நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.
Tags:    

Similar News