செய்திகள்

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரணை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2018-01-17 02:48 GMT   |   Update On 2018-01-17 02:48 GMT
துணை வேந்தராக சுவாமிநாதன் இருந்தபோது பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும், துணைவேந்தர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட நிலையில், திடீரென தற்கொலை செய்துகொண்டவருமான அங்கமுத்து அவரது தற்கொலை கடிதத்தில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன. அக்கடிதத்தின் மூலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஊழலைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை என்பது தெளிவாகிறது. இது மிகவும் கவலையளிக்கிறது.

பா.ம.க. முன்வைத்த குற்றச்சாட்டுகளை அங்கமுத்துவின் தற்கொலை கடிதம் உறுதி செய்துள்ளது. அங்கமுத்துவின் தற்கொலை கடிதத்தில் கூறப்பட்டுள்ள புகார்கள் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல்களில் ஒரு சிறு பகுதி மட்டும் தான். இதைவிட பல மடங்கு ஊழல்கள் அங்கு நடந்துள்ளன.

பெரியார் பல்கலைக்கழகத்தில் சுவாமிநாதன் துணைவேந்தராக இருந்தபோது நடைபெற்ற ஊழல்கள் குறித்தும், அவருக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்கள், உயர்கல்வித்துறை செயலாளர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்களில் நடந்த இதேபோன்ற ஊழல்கள், துணைவேந்தர் நியமன ஊழல்கள் குறித்தும் சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News