கொம்பாக்கத்தில் கழிவறையில் தவறி விழுந்து மூதாட்டி பலி
புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 69).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கம் இறந்து விட்டார். அது முதல் ராஜேஸ்வரி தனியாக வசித்து வந்தார். அருகில் வசிக்கும் அவரது மகன் காமராஜ் சாப்பாடு கொடுத்து விட்டு பார்த்து செல்வார்.
இந்த நிலையில் நேற்று காலை ராஜேஸ்வரிக்கு சாப்பாடு கொடுக்க காமராஜின் மகன்கள் வந்தனர். வீட்டில் கழிவறையில் ராஜேஸ்வரி தவறி விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அவர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காமராஜும், அக்கம் பக்கத்தினரும் ராஜேஸ்வரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.