கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்பட்ட 7 கட்டிடங்களுக்கு சீல் வைப்பு
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகரில் வரையறைக்கு உட்பட்டுதான் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதனை மதிக்காமல் பலர் கட்டிடம் கட்டி வருகின்றனர். இதனால் இயற்கை பேரிடர் ஏற்படும் சமயத்தில் கட்டிடங்கள் இடிந்து பாதிக்கப்படுவதுடன் உயிர் பலியும் ஏற்படும் சூழல் உள்ளது.
விதி மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மட்டுமின்றி மற்ற கட்டிடங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகர் அமைப்பு அலுவலர்கள், ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 47 கட்டிட உரிமையாளர்களுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அவற்றுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது.
நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், இளநிலைப் பொறியாளர் சேகர் மற்றும் அலுவலர்கள் ஏரிச்சாலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் பள்ளி, வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம், தொழிலதிபர் பங்களா உள்பட 7 கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.
இது குறித்த ஆணையாளர் சரவணன் தெரிவிக்கையில், நோட்டீஸ் அனுப்பப்பட்ட 47 கட்டிடங்களில் தற்போது 7 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார்.