செய்திகள்

மதுரையில் நிதி நிறுவனத்தில் நகை-பணம் கொள்ளை

Published On 2017-12-16 09:21 GMT   |   Update On 2017-12-16 09:21 GMT
மதுரையில் நிதி நிறுவனத்தில் நகை-பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலமாசி வீதியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை:

மதுரை மேலமாசிவீதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு நேதாஜி ரோட்டைச் சேர்ந்த கணேசன் (வயது48) என்பவர் பணியாற்றி வருகிறார்.

வழக்கம்போல் மதியம் கணேசன் அலுவலகத்தின் உள்அறையில் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அவரை தவிர அங்கு யாரும் இல்லை.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர் திடீரென்று அலுவலகத்தில் நுழைந்து மேஜை டிராயரில் இருந்த 4 பவுன் நகை, ரூ.33 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்துக்கொண்டு தப்பினான். அதிர்ச்சி அடைந்த கணேசன் மர்ம நபரை பிடிக்க முயன்றார். அவரது முயற்சிக்கு பலன் இல்லை.

இதுகுறித்து திடீர்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

நகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேலமாசி வீதியிலேயே நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News