செய்திகள்

போலி சிமெண்ட், பெயிண்ட் கம்பெனி கண்டுபிடிப்பு: வியாபாரி கைது

Published On 2017-12-16 07:00 GMT   |   Update On 2017-12-16 07:00 GMT
கலசப்பாக்கம் அருகே போலி சிமெண்ட், பெயிண்ட் கம்பெனி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிமுத்து (வயது 35).

இவர் அதே கிராமத்தில் பெயிண்ட் கடை வைத்துள்ளார். இதில் சிமெண்ட், டைல்ஸ் உள்ளிட்டவை வைத்து மொத்த வியாபாரம் செய்து வந்தார்.

குறிப்பிட்ட நிறுவனத்தின் வெள்ளை சிமெண்ட், பெயிண்ட்டுகள் அதிகமாக விற்பனை செய்தார். இவரது கடையில் உள்ள வெள்ளை சிமெண்ட் பெயிண்ட் ஆகியவை தரமானதாக இல்லை என சென்னையில் உள்ள அந்த நிறுவனத்துக்கு புகார் வந்தது.

இதையடுத்து வெள்ளை சிமெண்ட் கம்பெனி அதிகாரிகள் விக்ரம், ஜேசுராஜ் ஆகியோர் அந்தோணிமுத்துவின் கடையில் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது அங்குள்ள சிமெண்ட், பெயிண்ட் ஆகியவை போலியாக தயாரிக்கப்பட்டவை எனத் தெரியவந்தது.

இதுகுறித்து கடலாடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் அந்தோணிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் போலியாக சிமெண்ட், பெயிண்ட் ஆகியவை தயாரித்து விற்பனை செய்ததாக கூறினார்.

காஞ்சி மெயின் ரோட்டில் அவர் ரகசியமாக நடத்தி வந்த போலி நிறுவனத்தை கண்டு பிடித்தனர்.

அங்கு சிமெண்ட் தயாரிக்கப்படும் எந்திரங்கள், பெயிண்ட் கலவை எந்திரங்கள் இருந்தன. மூட்டை, டப்பாக்கள் அடுக்கி வைத்திரந்தனர்.

மேலும் அவருக்கு சொந்தமான குடோனில் போலி சிமெண்ட், பெயிண்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர்.

போலி நிறுவனம், குடோன் கடை ஆகியவற்றுக்கு பூட்டு போட்டனர். அந்தோணிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் போலி சிமெண்ட், பெயிண்ட் கம்பெனி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News