செய்திகள்

ஜெயலலிதா மரணம்: விசாரணை கமி‌ஷனில் இன்று தீபக் ஆஜர்

Published On 2017-12-14 05:44 GMT   |   Update On 2017-12-14 05:44 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த பலருக்கு சம்மன் அனுப்பி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

இதுவரை விசாரணை ஆணையம் முன்பு தி.மு.க. மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன், மருத்துவ கல்வி இயக்குனராக இருந்த விமலா, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, சென்னை மருத்துவ கல்லூரி மயக்கவியல் துறை பேராசிரியை கலா, மருந்தியல் துறை உதவி பேராசிரியர் முத்துச்செல்வன், அரசு மருத்துவர் பாலாஜி, அக்கு பஞ்சர் டாக்டர் சங்கர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.


இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோரும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி தீபக் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் மற்றும் அது தொடர்பான விளக்கங்களை தீபக்கிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேட்டார். அப்போது தீபக் பல்வேறு தகவல்களை நீதிபதியிடம் கூறினார். தீபக் கூறிய அனைத்து தகவல்களையும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
Tags:    

Similar News