செய்திகள்
ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு 17-ந் தேதி வரை ‘பூத்’ சிலிப் வினியோகம்
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகிக்கும் பணி 17-ந் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் வீடுவீடாக கள ஆய்வு நடத்தி பூத் சிலிப்பை வினியோகம் செய்து வருகின்றனர். பூத் சிலிப்பில் எந்தவித குளறுபடியும் நடந்து விடக்கூடாது என்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டில் வாக்காளர்கள் இருந்தால் மட்டுமே அவர்களுடைய கையொப்பம் பெற்ற பிறகே பூத் சிலிப் வழங்கப்படுகிறது. வாக்காளர்கள் மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கல்லூரிக்கு சென்றிருந்தால் அவர்களுடைய அடையாள அட்டையை வீட்டில் உள்ளவர்கள் காண்பித்து பூத் சிலிப்பை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று எழில் நகர் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் தேர்தல் அலுவலர் ஜெகநாதன் தலைமையில் பூத் சிலிப் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. பூத் சிலிப் வினியோகிக்கும் பணி 17-ந் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.