செய்திகள்

ஆர்.கே.நகரில் ரூ.9800 பணத்துடன் அ.தி.மு.க. பிரமுகர் சிக்கினார்

Published On 2017-12-12 07:06 GMT   |   Update On 2017-12-12 07:06 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.9,800 பணத்துடன் நின்றிருந்த அ.தி.மு.க. பிரமுகரை பறக்கும் படையினர் மடக்கி பிடித்தனர்.
ராயபுரம்:

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும்படை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுவண்ணாரப்பேட்டை அம்முணி அம்மன் தோட்டம் 2-வது தெரு பகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து தேர்தல் பறக்கும்படை அதிகாரியான ராஜசேகர், ஆயுதப்படை போலீஸ்காரர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அ.தி.மு.க. பிரமுகரான கருப்பசாமி என்பவர் சந்தேகப்படும் வகையில் அங்கு நின்றிருந்தார். அவரை பறக்கும்படை அதிகாரியும், போலீஸ்காரரும் சோதனையிட்டனர். அவரிடம் ரூ.9800 பணம் இருந்தது. தனது ஆதார் அட்டையையும் அவர் வைத்திருந்தார். இதுபற்றி கேட்டபோது அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தார்.

இதனை தொடர்ந்து கருப்பசாமி மீது புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மிரட்டல் விடுத்தல் அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் கருப்பசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரிடமிருந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News